ஈஸா அல் மஸீஹ் இறைசன்னிதானத்திற்கு…

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 3

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்


).     ஈஸா அல் மஸீஹ் இறைசன்னிதானத்திற்கு

ஈஸாவைப் பற்றிய இஸ்லாத்தின் பாரம்பரிய நம்பிக்கைகளில் நிலையான மற்றுமொரு நம்பிக்கை, அவர் இறைசன்னிதானத்திற்கு ஏறினார் என்பதாகும். இந்த சத்தியம் குர்ஆனின் இவ்விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். சூறா 4:158

ஒருசிலர் கூறுவதுபோல ஈஸா அல் மஸீஹ் இரண்டாம் வானத்திற்கோ, மூன்றாம் வானத்திற்கோ எடுத்துக்கொள்ளப்பட்டார் என இவ் வசனங்கள் கூறவில்லை. ஆனால் இறைவன் ஈஸாவை தம்மிடம் எடுத்துக்கொண்டார். அதாவது இறைவன் ஈஸாவை உன்னத பரலோகத்தில், தம் சொந்த மகிமையான பிரசன்னத்திற்கு எடுத்துக்கொண்டார்.

இறைவேதம் இவ் உண்மையை இன்னும் விபரமாக உறுதிப்படுத்துகின்றது. ஆனால் நாம் இங்கு ஒருசில பகுதிகளையே, ஈஸாவின் பரமேறுதலுக்கும் உன்னத பரலோகத்தில் சர்வ வல்ல இறைவனுடைய பிரசன்னத்திற்கு அவர் எடுத்துக்கொள்ளப் பட்டதற்கும் ஆதாரமாக நோக்கப் போகின்றோம்.

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில்உயர எடுத்துக்கொள்ளப்பட்டார் அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்என்றார்கள்     (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:9-11).

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்       (கொலோசெயர் 3:1).

எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்தார்     (எபேசியர் 1:20-21).

பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்                    (யோவான் 17:4-5).

எனவே குர்ஆனும் இறைவேதமும் ஈஸா அல் மஸீஹின் பரமேறுதலைக் குறித்து போதிப்பதை நாம் காணலாம். வெறுமனே வானத்திற்கு ஏறிச்செல்லவில்லை, மாறாக அவற்றிற்கு மேலாக இறைவனுடைய மேலான பிரசன்னத்திற்கு சென்றார். (ஹதீஸ்களும் கூட ஈஸா அல் மஸீஹின் பரமேறுதலுக்கு உறுதுணையாய் காணப்படுகிறதே தவிர அதற்கு எதிராக ஒன்றும் இல்லை).


ஈஸா அல் மஸீஹின் பரமேறுதலின் காலம் மற்றும் அதற்கான காரணம் தொடர்பாக குர்ஆனும் இறைவேதமும் வித்தியாசப்படுவது கிறிஸ்தவர்களாலும் முஸ்லீம்களாலும் நன்கு அறியப்பட்டதே. ஆயினும் அவ் இரண்டும் இயேசு பரத்திற்கு எழுந்தருளினார், அவர் இன்னமும் அங்கு உயிருள்ளவராக இருக்கிறார் எனும் கருத்தில் ஒத்துள்ளன என்பதே மிகவும் முக்கியமானதாகும்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?