ஈஸா அல் மஸீஹின் தனித்துவத்தின் விளைவுகள்

நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 6

குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

3. ஈஸா அல் மஸீஹின்  தனித்துவத்தின் விளைவுகள்

ஈஸா அல் மஸீஹின் வாழ்வின் தனித்தன்மைகள் அவர் நபிமார்களிலும் பெரியவர் என்பதைக் காண்பிக்கின்றன. சாதாரண மனிதராயிருந்த, சாதாரண விதத்தில் பிறந்த, இறந்த, மற்ற மனிதரைப் போன்ற தோல்விகளைக் கொண்ட, பலரை இறைவன் நபிமார்களாய் எழுப்பினார். அதனால் அவர்கள் தீர்க்கதரிசன வரம், அவர்களுடைய வாழ்வில் இறைவனுடைய செயற்பாடு ஆகியவற்றைத் தவிர வேறெந்த விதத்திலும் மற்றவர்களை பார்க்கிலும் விசேஷித்தவர்களாய் இருக்கவில்லை. ஆனால் ஈஸா அல் மஸீஹின் கன்னி-பிறப்பு, அவரது பாவமற்ற தன்மை, அவரது பரமேறுதல், அவரது இரண்டாம்-வருகை ஆகியன அவர் சாதாரண ஒரு நபி அல்ல என்பதை சுட்டிக்காண்பிக்கின்றன. அவரது வாழ்வின் இத் தனித்துவ தன்மைகளின் ஒளியில், அவர் அனைத்திலும் பார்க்க, மற்ற மனிதர்கள் அனைவரிலும் பார்க்க மேலானவர் என கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதற்காக அவர்கள் குற்றப்படுத்தப்பட முடியாது. அவரது மகிமையான வாழ்வின் தன்மை மற்றும் முடிவின் மூலம் நிச்சயமாக முஸ்லீம்களும் கூட, முன்-எண்ணம் கொண்டிராமல், அவரிலும் இறைவனுடனான அவரது உறவிலும் உள்ள விசேஷத்துவத்தைக் காணலாம்.

வெளிப்படையாக நோக்கின், ஈஸா அல் மஸீஹ் வெறுமனே ஒரு தூதர் அல்ல. அவரைப் போன்ற ஏனைய தூதர்கள் அவருக்கு முன்பாகச் சென்றனர் என்பதை குர்ஆன் ஆமோதிக்கின்றது  (சூறா 5.75), ஆயினும் அவரது பிறப்பு, வாழ்வு, முடிவு, இரண்டாம் வருகை என்பவற்றின் முக்கியத்துவத்தின்படி, ஏனைய தூதர்களும் அவரைப் போன்றவர்கள் என கூறுவது கடினமாயுள்ளது. ஈஸா அல் மஸீஹ்வும் மற்றவர்களைப் போன்ற ஒரு தூதரானால், இறைவன் ஏன் அச் செயற்பாட்டைத் தொடராமல் தடுத்து, ஈஸா அல் மஸீஹ்வை கன்னி-பெண்ணிடத்தில் அவரது ஆவியின் வல்லமையினால் பிறக்கச் செய்தார். நீதியின் வழியில் அவரை எவ்விதத்திலும் குற்றமற்றவராக வழிநடத்தி, ஏனைய தூதர்கள் அடிக்கடி தவறு செய்யும்படி விட்டதும் ஏன்? இறைவன், மற்றைய தூதர்கள் தாம் வந்த இடத்திற்கே திரும்பும்படி விட்டுவிட்டு, கடந்த நூற்றாண்டுகள் முழுவதும் அவரது மகிமையின் பிரசன்னத்தில் தம்முடன் கூட இருக்கும்படியாக ஏன் ஈஸாவை எடுத்துக்கொண்டார். அத்துடன் ஏன் அவரை மீண்டும் இவ் உலகத்தை ஆளும்படி அனுப்பி, நியாயத்தீர்ப்பின் நாளை அறிவிக்கிறவராக தெரிந்துகொண்டார்?


ஈஸா அல் மஸீஹ் ஏனைய தூதர்களைப் போன்றவர் எனும் கருத்து, அவரது விசேஷித்த, தனித்தன்மை கொண்ட வாழ்வு, கனம், தேவனுடனான அவரது நெருங்கிய உறவு போன்ற பாரிய ஆதாரங்களுக்கு எதிராய் நிலைத்திருக்க முடியாது. ஏனைய மனிதர்கள் அனைவரும் இயற்கையின் நியதியின் பிரகாரம் வந்துபோனவர்களாயிருக்க, ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்விலும் அவரது முடிவிலும் நேரடியான தாக்கத்தினையும் ஈடுபாட்டையும் செலுத்துமுகமாக இறைவன் வேண்டுமென்றே இயற்கையை ஒருபுறம் தள்ளிவைத்திருப்பதை காணக் கூடியதாயுள்ளது. இறைவன் அவரது ஆவியால் கன்னி-பெண்ணிடத்தில் கருவுறச் செய்ததன் மூலமே அவரை இவ்வுலகிற்கு கொண்டு வந்தார். கடந்த நூற்றாண்டு காலம் முழுவதும் தன்னுடைய சுய மகிமையின் சமூகத்தில், தன்னுடன் இருக்கும்பொருட்டு அவரை இறைசந்நிதானத்திற்கு எடுத்துக்கொண்டார். மனுக்குலத்தின் வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வரவும் இறைவனுடைய நியாயத்தீர்ப்பின் நாளை அறிவிக்கவும் அவரை மீண்டும் பூமிக்கு அனுப்பவுள்ளார். இறைவன், ஈஸா என்ற  இந்த நபருடைய வாழ்வின் எல்லா அம்சங்களிலும் ஈடுபடுவதை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஏனைய மனிதர்கள் மண்ணிலிருந்து வந்து, மண்ணுக்குச் செல்ல, ஈஸா அல் மஸீஹ் இறைவனிடத்திலிருந்து வந்து, இறைவனிடத்திற்குச் செல்கின்றார் (யோவான் 16:28). சில விதங்களில் இறைவனும் ஈஸா அல் மஸீஹ்வும் இவ்வுலகில் இதுவரை வாழ்ந்த எந்தவொரு மனிதனும் கொண்டிராத, இன்பமான ஒரு உறவைக் கொண்டுள்ளனர்.

ஈஸா அல் மஸீஹ் இறைவனுடன் கொண்டிருந்த இந்த விசேஷித்த, உறுதியான உறவை அர்த்தப்படுத்தும் இறைவேத ஆதாரங்களையும் குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளமை, சாதாரண தூதரை விட ஈஸா அல் மஸீஹ் மேலானவர் என்பதை இன்னமும் வலியுறுத்துகின்றது. குர்ஆன் ஈஸா அல் மஸீஹ்வின் தனித்துவத்தைக் குறித்து ஏதாவது முக்கியத்துவத்தை தருகின்றதா? மனித வரலாற்றில் அவரை அசாதாரணமானவராய் காண்பிக்கும், அவரைப் பற்றிய விடயங்களுடன் ஒத்ததா? வெளிப்படுத்துகின்றதா? அது அவ்விதம் செய்கின்றதா - அல்லது நாம் தேடும் பதிலைக் கண்டுபிடிப்பதற்காகவும், மெய்யாகவே இந்த ஈஸா அல் மஸீஹ் என்ற நபரை யார் என்பதைக் கண்டறியும்படியாகவும் நாம் இறைவேதத்திற்குத் திரும்ப வேண்டுமா என நாம் பார்ப்போம்.
 

                    (தொடரும்)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?