ரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் நபி யஹ்யா

ரப்புல் ஆலமீனுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் நபி யஹ்யா
யோவான் 1:22-24 

22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். 24 அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.

அனுப்பப்பட்டவர்கள் யஹ்யா நபியை நோக்கி கேள்விக் கனைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தார்கள். மஸீஹ்வின் மெய்யான வருகைக்கு முன்பாக வரும் என்று அவர்கள் எதிர்பார்த்த தவறான உபதேசங்களைப் பற்றியதாகவே இந்தக் கேள்விகள் காணப்பட்டது. ஆனால் யஹ்யா நபி தான் மஸீஹ் அவர்களும் அல்ல, இல்யாஸ் நபியும் அல்ல, முஸா நபியால்  முன்னுரைக்கப்பட்ட நபியும் நானல்ல என்று கூறியதால், அவர்களுடைய பார்வையில் அவர் தன்னுடைய முக்கியத்துவத்தையும் ஆர்வத்தையும் இழந்தார். ஆயினும் அவர்கள் அவர் யார் என்றும் அவருடைய செய்தியை கொடுத்தது யார் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சூழ்நிலையை முழுவதும் அறிந்துகொள்ளாமல் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பச் செல்லக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கமாயிருந்தது.

அந்தக் கேள்விகளுக்கும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கும் (ஏசாயா 40:3), எந்தத் தொடர்புமில்லை, ஆனால் ரூஹுல்குத்தூஸானவர் யஹ்யா நபியை  அந்த வேதப்பகுதிக்கு வழிநடத்தினார். ரப்புடைய வழியை ஆயத்தப்படுத்தும்படி வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் என்று அவர் தன்னை வருணித்தார். அவர் பரிசுத்த இறைவேதத்திலிருந்து அவர்களுக்கு யஹ்யா நபி எடுத்துக் கூறியிருக்காவிட்டால், அவர் தன்னைத்தானே அங்கீகரித்து சொந்த வெளிப்படுத்தல்களைக் கூறுகிறான் என்று அவரைக் குற்றஞ்சாட்டியிருப்பார்கள். அதன்பிறகு அவரை முஷ்ரிக்காக நியாயந்தீர்த்திருப்பார்கள். ஆகவே யஹ்யா நபி தன்னைத் தாழ்த்தி, பழைய ஏற்பாட்டிலுள்ள மிகவும் தாழ்மையான நிலையை எடுத்துக்கொண்டு, தான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்றார்.
நாம் அனைவரும் நம்முடைய உலகம் என்னும் வனாந்தரத்தில் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி குழப்பங்களும் ஒழுக்கமின்மையும் காணப்படுகிறது. ஆனால் இறைவன் நம்முடைய ஏழ்மையான உலகத்தையும் கெட்டுப்போன மக்களையும் அப்படியே விட்டுவிடுவதில்லை. அவர் மனுக்குலத்தைச் விடுவிக்கும்படி அவர்களிடம் வருகிறார். பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வரும் இந்த கிருபை மிகவும் பெரியது. பரிசுத்தர் நமக்கு உரிய அழிவைக் கொடாமல், தொலைந்துபோன நம்மைத் தேடிவருகிறார். அவருடைய அன்பை நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அது பெரியது. இந்த வனாந்தரத்தை நந்தவனமாக மாற்றுவதையும் அவருடைய இரட்சிப்பின் இறுதி நோக்கம் உள்ளடக்கியிருக்கிறது.

மஸீஹ்வில் இறைவன் இவ்வுலகிற்கு வருகிறார் என்பதை யஹ்யா நபி ரூஹுல் குத்தூஸின் மூலம் புரிந்துகொண்டார். வருகிறவரை வரவேற்கும்படி மக்கள் தங்கள் சிந்தையில் தெளிவடைய வேண்டும் என்று மக்களை அழைக்க ஆரம்பித்தார். ஈஸா அல் மஸீஹ்வுக்காக பாதையை ஆயத்தப்படுத்துவதில் அவருக்கிருந்த வைராக்கியம் அவரை நம்முடைய வனாந்தரமான உலகத்தில் ஒரு சத்தமாக மாற்றியது. அவர் தன்னை ஒரு ரஸுல் என்றோ நபி என்றோ அழைக்காமல் வெறும் சத்தம் என்று அழைத்தார். ஆனால் இந்த சத்தத்தை இறைவன் அங்கீகரித்தார், அது மனசாட்சிகளை உறங்கவிடவில்லை, மக்களை மகிழ்ச்சியோடு பாவம் செய்யவிடவில்லை.

இந்தச் சத்தம் என்ன சொன்னது? அவருடைய செய்தியின் கருப்பொருள் இதுதான்: எழுந்திருங்கள், இறைவனுடைய இராஜ்யம் உங்கள் மேல் வந்திருக்கிறது! உங்கள் வாழ்க்கையைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள்! இறைவன் பரிசுத்தமானவர் அவர் உங்களை நியாயம்தீர்ப்பார். ஒவ்வொரு பொய்க்கும், களவுக்கும், குற்றத்திற்கும், அநீதிக்கும் இறைவன் உங்களிடத்தில் கணக்குக் கேட்டு உங்களை நரகத்தில் தண்டிப்பார். இறைவன் உங்கள் பாவங்களை கவனியாமல் விட்டுவிட மாட்டார். ஒரு தீமையான மனிதன் தன்னுடய அனைத்துப் பாவங்களுடனும் இறைவனுடைய பார்வையில் தீமையானவனாகவே காணப்படுவான். பார்வைக்கு நல்லவனாக இருப்பவனும் ஒரு தீயவனைக் காட்டிலும் சிறந்தவன் அல்ல, ஏனெனில் அவருக்கு முன்பாக குற்றமற்றவன் ஒருவனுமில்லை.

யஹ்யா நபியுடைய இந்தக் கடினமான கோரிக்கைகள் மூலம் சுய பரிசோதனைக்கும், ஒருவனுக்குள் இருக்கும் தீமையைக் குறித்த அறிவிற்கும், பெருமை அழிப்பதற்கும், மனம்மாறுவதற்கும் மக்களை வழிநடத்தினார். நீங்கள் நல்லவர் என்றும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவர் என்றும் உங்களைப் பற்றி கருதுகிறீர்களா சகோதரர்களே? நேர்மையாக உங்கள் குற்றங்களை அறிக்கையிடுங்கள்! நீங்கள் ஏதாவது ஒரு சிறிய காரியத்திலாவது யாரையும் ஏமாற்றியிருந்தால், உடனடியாக உரியதை அதன் சொந்தக்காரரிடம் திருப்பிச் செலுத்திவிடுங்கள். உங்கள் பெருமைக்கு மரித்து இறைவனுக்காக வாழுங்கள். உங்கள் நடத்தையில் கோணலானதைச் சரிசெய்யுங்கள். நீங்கள் தீமை செய்தவராகையால் தாழவிழுந்து இறைவனைப் பணிந்துகொள்ளுங்கள்.

யூத தலைவர்கள் அனுப்பியவர்களில் பெரும்பான்மையானவர்கள் உலமாக்களாயிருந்தார்கள். யஹ்யா நபியின் தைரியத்தைப் பார்த்து அவர்கள் கோபமடைந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்களை நீதிமான்கள் என்றும் பக்தியுள்ள நல்லவர்கள் என்றும் எல்லையற்ற திறமையுடன் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்பவர்கள் என்றும் பெருமையாக எண்ணிக்கொண்டார்கள், ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பக்தியுள்ளவர் களைப்போல நடித்தார்கள். ஆனால் உள்ளாக அவர்கள் சீர்கெட்டவர்களும், தங்கள் உள்ளான சிந்தையில் இருக்கக்கூடிய தீமையான எண்ணங்களை அவர்கள் கருத்தில்கொள்ளாத விரியன்பாம்புக் குட்டிகளுமாக காணப்பட்டார்கள். அவர்களுடைய விறைத்த முகத்தைப் பார்த்து யஹ்யா நபி பயந்துவிடவில்லை. அவர்களும் சீக்கிரத்தில் வரும் ரப்புடைய வழியை ஆயத்தம்செய்யும்படி இறைவனிடத்தில் திரும்ப வேண்டிய அவசியத் தேவையிலிருக்கிறார்கள் என்று நபி யஹ்யா அவர்களை எச்சரித்தார்.

துஆ
 யா ரப்பே, நீர் என்னுடைய கடந்த காலத்தையும், என்னுடைய இருதயத்தையும், அதிலுள்ள பாவங்களையும் அறிவீர். என்னுடைய மறைவான மற்றும் இரகசியமான மீறுதல்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். நான் என்னுடைய எல்லா கெட்ட செயல்களையும் உமக்கு முன்பாக அறிக்கையிட்டு உம்முடைய பாவமன்னிப்பை வேண்டி நிற்கிறேன். உம்முடைய சமூகத்திலிருந்து என்னைத் துரத்திவிடாதேயும். நான் யாரிடம் எல்லாம் ஏமாற்று வேலை செய்தேனோ அவர்களுக்குரியதை நான் திரும்பக்கொடுக்கவும், யாரையெல்லாம் நான் துக்கப்படுத்தியிருக்கிறேனோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவும் எனக்கு உதவிசெய்யும். என்னுடைய பெருமையை உடைத்து, உம்முடைய இரக்கத்தினால் எல்லாப் பாவங்களிலிருந்தும் என்னைக் கழுவி சுத்திகரித்தருளும் யா ரஹ்மானே!

கேள்வி:

  1. நபி யஹ்யா எவ்வாறு ரப்புக்கு  வழியை ஆயத்தப்படுத்தும்படி மக்களை அழைக்கிறார்?

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?